எனக்கு சில சந்தேகங்கள் இருக்குங்க, யாராவது கொஞ்சம் தீர்த்து வைங்களேன்.
ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில பண்ற தவறுகள பெரிதுபடுத்தி பாக்குற சமூகம், ஏங்க அவங்களே பொது வாழ்க்கையில பண்ற தவறுகள கண்டுக்கறதே இல்ல?
தனிப்பட்ட வாழ்க்கையில நல்லவங்களா இருக்கிறவங்க பொது வாழ்க்கையில தப்பான கருத்துக்களே வெச்சிருக்க மாட்டாங்களா?
ஒருத்தர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறு செய்தால் ஏற்படுற பாதிப்பு ஒரு சிறிய வட்டத்தை தான் பெரும்பாலும் பாதிக்குது, இன்னும் அதில் சில விஷயங்களுக்கு பரிகாரம் செய்வதின் மூலம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கலாம். ஆனா இதுவே பொது விஷயத்தில் செய்யும்போது பெரும்பான்மையாக பாதிக்கப் படுபவர்களுக்கு பல சமயங்களில் எந்தப் பரிகாரமும் செய்ய முடிவதில்லை, அப்படி இருக்கும்போது இதற்கு கொஞ்சமாவது கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா வேண்டாமா?
நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் பலருக்கும், பல விஷயங்களுக்கும் பொருந்தினாலும், இன்னைக்கு நம்மளோட தலையாய பிரச்சினை அணு ஒப்பந்தம் பற்றியும், அதை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஆதரிக்கும் சாராரைப் பற்றியும்தான். இவர்கள் சொல்லுவதிலேயே முக்கியமானக் காரணம் மின்சாரத் தன்னிறைவாம்.
சரிங்க நான் இதை எதிர்க்கறேன்னா, எனக்கென்ன தெரியும் அடிப்படை தேவையான மின்சாரத்தைப் பற்றியும் அந்தப் பற்றாகுறையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்? எனக்கு இது பற்றி ஜாஸ்தி தெரியாதுதான், ஆனா ஒரு விஷயம் சுய புத்தி உள்ள எல்லாருக்குமே தெரியும், அது என்னன்னா, மின்சாரம் இல்லாமலோ, இல்ல அரைகுறையான மின்சார வசதிகளோடோ கூட மனிதன் வாழ்ந்திடலாம், ஆனா புற்றுநோய், தோல் வியாதிகள், மேலும் பல பிறவிக் குறைபாடுகளோட காலம் கடத்துவதுதான் நரகத்திலும் கொடூர நரகம்.
தெரியாமத்தான் கேக்குறேன், பாதுகாப்பு பாதுகாப்புன்னு பேத்துறீங்களே, நாட்ல நூறு வகையான அணு ஆயுதங்களை வெச்சுகிட்டா எல்லாரும் பயந்துடுவாங்களா, அழிக்க நினைக்கறவன் கையில் ஒண்ணிருந்தாலும் நூறிருந்தாலும் அதே விளைவுதானே. சரி இதை எதிர்க்கிறவங்களாவது கொஞ்சம் ஒழுங்கான காரணத்தை முழுசா சொல்லி எதிர்க்கிறாங்களா, அதுவும் இல்லை. நாம எப்படி அமரிக்காகிட்ட அடிமயாகலாம்னு எதிர்த்து பல வாதங்கள எழுப்புறவங்கக் கூட அணு உலைகளால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் அதனை சார்ந்துள்ள உயிரினங்கள், விவசாயம், இவ்விரண்டையும் நம்பியுள்ள அனைத்து வகை தொழில்கள்னு எல்லாமே பயங்கர மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்கிற உண்மையான, அதி முக்கியமான வாதத்தை ஏன் வைக்க மாட்டேன் என்கின்றனர்.
நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள்(அது அமெரிக்க உதவியினாலாகட்டும், இல்லை பிரான்சு உதவியினாலாகட்டும் இல்லை நாமே யார் உதவியும் இன்றி ஏற்படுத்துபவைகளாகட்டும்) அமைப்பதனால் நாட்டின் எதிர்காலமே சூனியமாகாதா?
நாம் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தானே முடிவெடுக்க வேண்டும். அதிலும் இறந்த காலத்தில் பிற நாடுகளில் செய்தவற்றை வைத்து எப்படி நம் நாட்டிற்கு நிகழ்கால மற்றும் எதிர்கால முடிவுகள் எடுக்க முடியும்? இந்த விஷயத்திற்கு எப்படி பிரான்சை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும், இப்பொழுது பிரான்சுலேயே சில அணு உலைகளை பொதுமக்களின் எதிப்பினால் மூடி விட்டார்களே, மேலும் பல ஆண்டுகளாக அணு உலைகள் புதிதாக அமைப்பதில்லயே, ஏன்?
சரி அணு உலைகள் அமைக்கிறோம் பின்னர் அதன் கழிவுகளை என்ன செய்வது? பிரான்ஸில் மற்றும் ஜப்பானில்(பிரான்சின் உதவியால் கட்டப்பட்டது) உள்ள அணுக்கழிவு ரீசைக்கிளிங் ஆலைகள்தான் இதற்கென வடிவமைக்கப் பட்டவை. ஆனால் இவ்விரண்டில் ஒன்று முற்றிலும் செயலிழந்து விட்டதென்றும், மற்றொன்றில் குவியும் கழிவுகளை ரீசைக்கிளிங் செய்து மாளாமல் அவ்வாலையிலேயே தேக்கி வைத்துள்ளனர் என்றும் படிக்கின்றோமே, நம் நாட்டில் என்ன செய்யப் போகிறோம்? அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகிறோம்?
சரி இன்றில்லாமல் போகலாம் இன்னும் ஐம்பதாண்டுகளுக்குள்ளாக மாற்று ஏற்பாடை கண்டுபிடித்து விட மாட்டார்களா என்றால், இந்த விஷயத்தை பொறுத்த வரை பாதிப்பு கழிவினால் மட்டுமில்லை, உற்பத்தியினாலேயே உள்ளது, அதன் உபயோகத்தினாலேயே உள்ளது. என்னுடைய மிக நெருங்கிய உறவினர் என்ன ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்றால், புற்று நோயிற்கு(குறிப்பாக மார்பக புற்று நோய்) அளிக்கப்படும் சிகிச்சையின்போது சில சமயம் பாதிக்கப்பட்டவரும், சில சமயம் சிகிச்சை அளிப்பவருமே கதிர் வீச்சின் மோசமான பாதிப்புக்குள்ளாகின்ற காரணத்தால், அதன் வீரியத்தை குறைப்பது அல்லது இந்த சிகிச்சயிலேயே சிறியளவில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா எனப் பார்ப்பது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது இன்றைய முன்னேற்றத்திற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று எப்படி கேட்பது? முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்க ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகள் வேண்டாமா?
ஓரளவிற்கு சட்டத்தை ஞாயமாக செயல்படுத்தும் நாடான பிரான்சிலயே அனைத்து பாதுகாப்புகளும் செய்த பின்னரும் நிறைய நீர் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவே, சாயப் பட்டறைகளின் அத்துமீறலை கூட சரியாக தட்டிக் கேட்காத நம் நாட்டின் நிலை என்னவாகும்? நாம் ஒரிஸ்ஸா கடற்கரையில் உள்ள தோரியத்தை வைத்து அணு உலைகள் அமைக்கலாமே எனச் சிலர் கூறுகின்றனர். அந்த அணு உலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? பாதுகாப்பு, மின்சாரம் எனக் கூறும் நாம் ஏற்கனவே அணு உலைகள் அமைந்த பகுதிகளில் என்னன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம், கசிவு ஏற்பட்டால் எப்படி செயல்படுவது என்று. இதை தவிர வேறொன்றும் இல்லை. அணு உலைகள் அமைந்துள்ள இடங்களில் உள்ள வயல்களின் விவசாயப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்ற சட்டம் சில நாடுகளில் உள்ளது. ஏன் அங்குள்ள புற்களை உண்ணும் ஆடுகளை கூட உண்ணக் கூடாதென்கின்றனர். இவ்வளவு முக்கியமானப் பிரச்சினையில் வழ வழா கொழக் கொழா பதில்கள் சரிவருமா?
சரி எல்லாவற்றையும் விடுங்கள், பிரான்ஸில் பல ஆறுகளை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி, அதற்கு மாற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, நம் நாட்டில் அது கொஞ்சமாவது சாத்தியமா? நிலத்தடி நீரிலிருந்து அவ்வளவும் பாதிப்புள்ளாகி மோசமான நிலை ஏற்படாதா, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது சாத்தியப்படுமா?
நம்முடைய முக்கிய ஆதார தொழிலான விவசாயம் முற்றிலும் அழிவுப்பாதையில் சென்றுவிடாதா? இதனால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடாதா? அனைத்து தொழில்களும் பலவீனமடயாதா? இன்றைய நிலையில் சாதாரண நோய்களுக்குக் கூட மருத்துவ வசதியின்றி பலர் வாழ்வு கேள்விக்குறியோடுள்ளது, நாளை இதன் பாதிப்புகளால் ஏற்படும் புதிய நோய்களுக்கும், அதற்கு தேவையான மருத்துவத்திற்கும் எங்கு செல்வீர்கள், பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தி சந்ததிகளையே பாதிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த இதனை நாம் போற்றித்தான் ஆக வேண்டுமா?
மின்சாரத் தன்னிறைவடைஞ்சு மென்பொருள் ஏற்றுமதி செஞ்சு ஈட்டுற அன்னியசெலாவனிய மருத்துவத்துக்கும், நஷ்ட ஈடுக்கும் தாரைவார்க்கப் போறோமா? இல்ல இந்த உலைகளை பாதுகாக்கும் பொருட்டு செலவிடப்போறோமா? மின்சார விளக்கோட ஸ்விட்சை போடுவதற்கு கண், கை, கால் செயல்பாடுகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது தானே பரந்த நோக்கமுடைய சிந்தனை? பல பயன்பாடுகளில் ஏற்கனவே நாம் அணுசக்தியை பயன்படுத்தத் தொடங்கி விட்டோம், அதனை எதுவும் செய்து தடுக்க முடியாது, உள்ள உலைகளை எல்லாம் மூடிவிடுவதும் தீர்வாகிவிடாது. ஆனால் மேலும் பல உலைகளை ஏற்படுத்த வேண்டாம் என்பதே இங்கு கூறப்படுகிறது.
நான் ஆரம்பத்தில் கேட்ட சிலக் கேள்விகள் இந்தப் பிரச்சினையிலும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குரியது. ஏனென்றால் மக்கள் ஒருவரின் மேல் வைக்கும் நம்பிக்கையை யாரும் தவறாக மட்டுமல்ல பொறுப்பில்லாமலும் பயன்படுத்தக் கூடாது. அது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல பாடுபடுவதாய் கூறும் அனைத்து துறையினருக்குமே பொருந்தும்.